காலங்காலையில் மார்கழி மாதத்தில் பெருமாள் கோயிலிலிருந்து'உள்ளம் உருகுதய்யா.கற்பனை என்றாலும் ,போன்ற டி எம் எஸ் பாட்டுக்கள் கேட்டுக்கொண்டே நாட்களை துவங்குவோம்-ரேடியோவில் எப்போது பார்த்தாலும் கர்னாடிக் மியூசிக் தான்-சினிமாப்பாடல்கள் ஞாயிறு மட்டும்தான்.
நாங்கள் அக்ரஹாரத்திலோ அல்லது எங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்களுடனோ அதிகம் வளர்ந்தவர்கள் இல்லை.ஜாதியை பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது.எல்லோருடனும் இணக்கமாகப் பழகுவதையே எங்களுக்கு வீட்டில் சொல்லிக்கொடுத்தனர்.பாடல் கேட்பது எப்படி பிடிக்க ஆரம்பித்தது என்றால்-மதுரை வீதிகளில் பல இடங்களில் பாசறை வைத்து தி முகவினர் எம் ஜியார் பாடல்களை ஒலிபரப்பினது தான்-'குறிப்பாக-திராவிடப் பொன்னாடே, ,அச்சம் என்பது மடமையடா,தூங்காதே தம்பி, மற்றும் பல பட்டுக்கோட்டையார் பாடல்களும் -கண்ணதாசன் பாடல்களும் கேட்டுக்கேட்டு மனதை பறிகொடுத்தோம்.சித்திரைபொருட்காட்சி. புட்பால் பந்தயங்கள் போன்ற நிகழ்ச்சிகளிலும் இவைகளோடு சிவாஜி, ,ஜெமினி,எஸ் எஸ் சார் பாடல்களும் எங்களை ஒரு உலுக்கு உலுக்கிவிடும்.
கல்யாண வீடுகளில்-'வாராயோ தோழி வாராயோ' இல்லாமல் இராது.
திமுக பற்றியெல்லாம் எங்களுக்குப் புரியாது..ஆனால் எம்ஜியார் சண்டை பிடிக்கும்-சிவாஜி நடிப்பு பிடிக்கும்.சத்குரு சமாஜம் ஒன்றில்தான் சிறப்பாகவே கர்நாடக சங்கீதம் நன்கு பாடப்பட்டு வந்தது-அங்கெ வந்து பாடாத வித்துவான்கள் எவருமிலர்-மீனாட்சி கோவிலிலும் விழாக்காலங்களில் இவர்கள் மதுரை ரசிகர்களைக் கட்டிப்போட்டிருக்கின்றனர்.அந்த நேரத்தில்தான் ஜெ.மு, சாமி கடைக்காரர்களும் இசை விழாக்கள் விளக்குத்தூண் அருகே நடத்தி நல்ல சங்கீத ரசனையைப்பாமரர்களிடமும் பரப்பினர்.அலங்கார தியேட்டர் அருகே உள்ள அரசமரம் பிள்ளையார் கோயில் கச்சேரிகளுக்கு மிகவும் பிரசித்தமானவை.விழாவில் ஆண்டுதோறும் நடக்கும் இசை நிகழ்ச்சிகள் தவிர, இலக்கியச்சிறப்பு நிகழ்வுகளும் பிரசித்தம். அடிகளாா்கள், கண்ணதாசன், ஜெயகாந்தன் உள்ளிட்ட சிறப்புப் பேச்சாளா்களைக் கேட்பதற்குப் பெருந்திரளாய் மக்கள் கூடுவாா்கள், நள்ளிரவு கடந்தும்.--நண்பர் முத்து ஸ்ரீனிவாசன் குறிப்பிடுவது போல் .-ஒரு முறை ஜெயகாந்தன் அங்கே பேசச் செல்லவிருந்தார்.என்ன தலைப்பு என அவர்வினவ-அதற்குமுன் பேசுபவர் 'எங்கே போகிறோம்?' என்ற தலைப்பில் பேசுவதாகச் சொல்ல-"சரி- எங்கிருந்து வருகிறோம்?" என்று பேசுகிறேன் என்று சொல்லி-சிறப்பாகப் பேசியதும் நினைவுக்கு வருகிறது.மதுரை சோமு போன்ற மேதைகளின் கச்சேரி விடிய விடிய நடக்கும். மதுரை மக்களின் ஈடுபாடும் ரசனையும் அத்தகையன..திருநகர், எஸ் எஸ் காலனி ,மஹால் பகுதிகளிலும் வாரியார் போன்றோரது சொற்பொழிவுகளும் ,எல்.ஆர் ஈஸ்வ்ரி போன்றோர் இன்னிசையும் ,பட்டிமன்றங்களும் மதுரைக்கு செவி விருந்து அளித்தனர்சேதுபதி பள்ளியில் தீக்ஷிதரின் ராமாயணம், நாராயணீயம் உபன்யாசங்களுக்கு இரண்டாயிரம்பேர் கூட வருவர்-ஆனந்தக்கண்ணீர் உகுப்பர்!புலவர் கீரனின் சொற்பொழிவுகளும் கேட்போரைப் பரவசத்தில் ஆழ்த்தும்.இசை கலந்த உரைகளாக இவை இருந்ததே நான் சொல்ல வருவது.
.கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை இல்லாத -அரிச்சந்திரா ,ராமாயணம், அல்லி-அர்ஜுனன், பவளக்கொடி நாடகங்கள் இல்லாத கோவில்கள்-குறிப்பாக-பாண்டி கோயில், அய்யனார் கோயில், மகமாயி-காளி கோயில்களே கிடையாது எனலாம். அடிக்கடி தமுக்கத்தில் நல்ல நாடகக்குழுக்கள் முகாமிட்டு நாடகங்களை நடத்தி வந்தனர்.அப்படித் தான் ஒரு முறை நவாப் ராஜமாணிக்கம் குழுவினரின் பல அற்புதமான நாடகங்கள் கண்டு மகிழ்ந்தோம்.
பல திரைப்படங்களிலும் மதுரையை நிலைக்களனாக வைத்து அருமையான நாட்டுப்புறப் பாடல்களும் வந்து மக்களை வசப்படுத்தின.சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி,கந்தர் ஷஷ்டி விழாக் காலங்களிலும் இரவுப்பூராக்கச்சேரிகள் நடைபெறும்.மதுரை மல்லிகைக்கு மட்டும் அல்ல இசை மெட்டுக்களுக்கும் -தெம்மாங்குப் பாடல்களுக்கும் பெயர் போனது தான்.
Madurai O Madurai 20.

Comments

Popular posts from this blog