மூலக்கரை பஸ் ஸ்டாப்புக்கும்  இன்ஜினியரிங் கல்லூரி-டப்,திருப்பரங்குன்றத்துக்கும் நடுவே பச்சைப் பசேல் வயல் கொஞ்சம் கொஞ்சமாய் காலத்தின் கட்டாயத்தால் குடியிருப்புகளாய் மாற வழி வகுத்ததே மன்னர் கல்லூரி ஆசிரியர்களின் முயற்சியால் உருவாக்கிய மூட்டா தோட்டம்  தொடங்கிவைத்ததுதான் .இன்று பற்பல வீடுகளும், வீதிகளுமாய்க் காடசி தந்தாலும் அன்று--1986ல் இரண்டு சிறிய வீதிகள்-மொத்தமே பன்னிரண்டு வீடுகள் தான்!--சுற்றுப்புறம் அழகிய வயல்வெளி.தெற்குப் புறம் திருப்பரன் குன்றம் கோவில் தரிசனம்,வடக்கே எப்போதும் ட்ராபிக்  இருக்கும் நெடுஞ்சாலை-கடந்தால் அகண்ட பரந்த அருமையான மூலக்கரை ஏரி !எப்போதும் வீசும் தென்றல் காற்று-இரண்டு அடியில் சுனை நீர் -அடடா சொல்லவும் வேண்டுமோ-எங்கள் குடியிருப்பு குறித்து?

அடிக்கடி முருகனை தரிசித்துவிட்டு வருவோம். கல்லூரி பெல் அடிக்கப் பதினைந்து நிமிடம் முன் புறப்படுவோம்-சாப்பிட வீட்டுக்கு வந்து செல்வோம்.மாதமொரு முறை பவுர்ணமி நிலவில் அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த சாப்பாடுவகைகளோடு குழந்தைகள் பாடும் ஆடும் காட்சிகள்-போராட்ட வாழ்க்கைக்கு இடையே சகோதர சகோதரியாய் வாழ்ந்த வாழ்வின் பொன்னான தருணங்கள் அவை!

பக்கத்தில் சாரங்கபாணி அய்யா வீடு-எதிரே சசி சார் -அடுத்து காசிராஜன் சார்-விண்மதி மேடம்-அதற்கும் அடுத்து நண்பர் -நூலகர் மனோகரன்,பின்புறம் தலைவர் பார்த்தசாரதி-அருகே ஆருயிர் நண்பர் ராஜசேகர்-அவர் வீட்டுக்குமுன் 'அண்ணாச்சி' விஜி  இல்லங்கள்.பேச்சுக்கள் ஆரம்பித்தால் -சில சமயம் முதல் தெருவில் நாங்கள் போடும் கூச்சல்கள் தலைவரையும், விஜியையும் வரவைக்கும். சிலசமயங்களில் நகைச்சுவை கரைபுரண்டு ஓடும் -கள்ளமில்லா உள்ளங்களோடு இனிதே கழித்த நாட்கள் நெஞ்சில் என்றும் நிழலாடும்.

வருடம் ஒருமுறை மீனாட்சி கல்யாணத்திற்கு முருகன் செல்வார்-அதுபோல் சுந்தரேஸ்வரரும்-மீனாட்சியும் கந்தனின் மணத்துக்கு வருவார்கள்-மேலே அகன்ற சாலைகளில் நின்று எங்களுக்குத் தரிசனம் கொடுத்து விட்டுத் தான் செல்வர்.1988ல் தான் திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேகம்-ஸ்ரீ ஜெயேந்திரர் வந்து நடத்தி வைத்தார்கள். கோடை காலங்களில் ஏரி  வற்றினாலும் வெள்ளரிக்காய் தோட்டங்கள் ஏராளமாகப் பயிர்செய்வார்கள் -யோகா , ஐஸ்வர்யாவுடன் -ஜாக்கி என்ற குட்டிநாயுடன் -அங்கு சென்று ஓடிவிளையாடி- வெள்ளரிப் பழங்களையும் ருசிபார்ப்பேன் .தென்னைமரங்கள் நட்டோம்-காய்கறித்தோட்டங்களும் போட்டோம்-எப்படி அமோகமாக விளைந்தது!

இன்று அன்று  இன்புற்று விளையாடிய அத்தனை முத்துக்களும் உலகம் முழுவதும் மிக நல்ல முறையில் குழந்தைகுட்டிகளோடு இனிதே வாழ்வது நாங்கள்  அனைவரும் -"ஊருக்கு உழைத்த யோகம்'என்பதில் என்ன ஐயம் இருக்கமுடியும்? மதுரை மாநகர் நாற்புறமும் விரிந்து செழித்தற்கு எங்கள்  மூட்டா தோட்டமும் ஒரு நல்ல அடையாளமே....மதுரை ஓ மதுரை 30.


Comments

Popular posts from this blog