மதுரை ஓ மதுரை-5.--ஏசி ஹை ஸ்கூல் ---பள்ளியில் படிக்கையிலே..
"சிங்கநாதம் வருகுது,,சீன நாகம் ஓடுது' என்ற பாட்டுடன்தான் எங்கள் பள்ளி பிரேயருடன் துவங்கும்.கள்ளம் இல்லா பிள்ளைகள் நாங்கள்.உலகத்தின் நஞ்சு துளிக்கூட படா அரும்புகள்-செய்த குறும்புகளோ ஆயிரம்-ஆனால் வில்லங்கமோ வில்லத்தனமோ எள்ளளவும் இல்லை-உண்மை .என்னால் எனக்கு வகுப்பு எடுத்த அத்துணை ஆசிரியர் பெயரையம் இன்றும் சொல்லமுடியும்-அது குறித்து எனக்குப் பெருமையே-ஆனால் என்னை இன்னார்தான் உருவாக்கினார் என்று மட்டும் சொல்லமாட்டேன்.அது வடி கட்டின பொய்.அப்படியிருப்பின் நான் இன்னும் சிறப்பாகவே என்னை உருவாக்கியிருந்திருப்பேன்.இன்று குழந்தைகளுக்கு இருக்கும் எந்த வசதியும் என் காலத்தில் எங்களுக்கு இல்லை-அது குறித்த ஏக்கமும் ஒரு போதும் இல்லை.நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் பள்ளிக்கூடம் போனோம்-படித்தோம்-விளையாடினோம்,வேடிக்கையாகவே எங்கள் காலம் கழிந்தது.தல்லாகுளம், பெருமாள் கோயில் அருகே அமைந்த அப்பள்ளிக்கூடம் எங்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்தது.அது ஓர் கிறித்தவப் பள்ளி என்று இன்று பேசுவோர் பேசட்டும்.-எங்களுக்கு ஜாதியும் இனமும் மொழியும் -வேறு எந்தப்பிரிவினையும் அப்போதும் தெரியாது.அப்படிதான் எங்கள் பள்ளியில் பயின்றோம்.ஜாலியான பள்ளி அது. விளையாட சிதம்பரம் மைதானத்திற்குத் தான் செல்வோம்-அதனாலென்ன-கொடுத்ததோ ஆறு மாதத்திற்கு ஒரு முறை -ஆறு ரூபாயோ என்னவோ.! என்னை வீட்டிலிருந்து கூட்டிக்கொண்டுபோய்-கல்வி கற்க(?) வைத்து, எவரும் என்னை அழவிடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு என் அண்ணன்,வழிகாட்டி,ஆசான் மணிக்குத் தான்.எத்தனை நண்பர்கள்!இனிமையும் அன்பும் பண்பும் நிரம்பப் பெற்ற நல்லவர்கள்- எங்கே சென்றனரோ?இனிதே வாழட்டும்.
சுந்தர் ராஜ் பால் எங்கள் தலைமை ஆசிரியர்-பதவிக்கு ஏற்ற பெருந்தகை-நாங்கள் படித்த தருணம் அமெரிக்கா சென்று வந்து பிரம்பை உடைத்துப்போட்டு எந்த ஆசிரியரும் பிரம்பு பயன் படுத்தலாகாது என்று உத்தரவு பிறப்பித்த மஹானுபாவர்.ஜான் எஸ், எட்வர்ட் எங்கள் அசிஸ்டன்ட் ஹெச் எம்.மெல்லிய புன்னகையுடன் வலம் வரும் செயல் வீரர்.ஆறாவதுக்குஜான்..வீ. பார்த்தசாரதி, ஏழாவதுக்கு ராஜாசாமி ,எட்டாவதுக்கு ஸ்கடர் அய்யா,ஒம்பதுக்கு வேங்கடசுப்ரமணியன் (நாகேஷ்!)-பத்தாவதுக்கு ஆர்தர் அய்யா, அடடா எப்படிப் பட்ட நல்லாசிரியர்கள்! விளையாட்டுக்கு சாமிதாஸ், எபி, டைலர் , காந்தி என்போர்.டைலர்தான் எங்களுக்கு பிடித்தவர்-உள்ளே நுழையும்போதே அவரவர் பெயரைக் கூப்பிட்டு-நீட்டியும் முழக்கியும்-வரவேற்கும் சூரர்.கருப்பு சிவாஜியே.நன்கு பழகுவார்.அவருக்கும் எபிக்கும்தான் நாங்கள் அடங்குவோம்.ஆஹா பெரியவர் -எபி வாத்தியாரின் தந்தை-சாமுவேலை மறந்துவிட்டேன்.நைச்சியமாகப்பேசியே கடுமையாக ட்ரில்ல வாங்கும் வீரர். அரசு வாத்தியார்தான் அனைவரையும் கவர்ந்தவர்,-அங்கோர் கோடு,இங்கொரு கோடு-அழகான படம் ரெடி.இனிய பேச்சு -பாடலுடன் கதைகள் வேறு-அற்புதம் செய்த வல்லோர்.தமிழுக்கு அலங்காரம் அய்யா-அழகு தமிழ் மென்மேலும் நாணத்தில் அவர் நடத்தும்போது மிளிரும்.கோவிந்தன் அய்யா-அரட்டை அரங்கம்தான் போங்கள்-மிகவும் சீரியஸ் அரங்கநாதன் அய்யா.கணக்குக்கு துளசிதாஸ்,பியாரெஸ், நரசிம்மன் ,வரலாறுக்கு துரைசாமி, எடி-நாள்தோறும் பொழுதோரும் சீவிமுடித்து சிங்காரமாய் உலா வருவார்,மேலும் இந்தி வகுப்புக்கு சீனிவாசன்,இது தவிர இன்னும் பலர்.
..........அய்யாவின் வெண்கலக்குரல் பிரேயர் ரொம்பப்பிடிக்கும்-பாடத்தைவிடவும்-அவர்தம் வேட்டையாடும் அனுபவங்களுக்கு தினமும் காத்திருப்போம்-அந்த மூடுக்கு அவர் வரும் வரை-நாமாகக் கேட்டுவிட்டால் வெளுத்துவிடுவார்-பிரம்புக்குத்தான் தடை-கைகளுக்கு இல்லையே! பசி வராமல் அவரைப் பார்த்துக் கொள்ள க்ளாஸ் லீடர் அம்மா முத்துப்பிள்ளை தான் பொறுப்பு.கொஞ்சம் சில்லறையை அனைவரும் கொடுத்து அருகே உள்ள மீனாட்சி சுந்தர பவனிலிருந்து ஆனியன் வடைகள் மற்றும் சூடான கோப்பி வாங்கிக்கொடுத்து நல்ல மூடில் அவரைத் தயார் செய்வோம்-' மைசூர் மஹாராணியிடமிருந்து தந்தி வந்தது -மேன் ஈட்டர் புலியை வேட்டையாட ' என்று துவக்கி இரண்டு மணி நேரம் எங்கோ காட்டில் பயமில்லாமல் சுற்றிக் கொண்டிருப்போம் .பிற்பாடு தான் தெரியும் அவர் இதற்காகவே ஜிம் கார்பேட் படித்து வருகிறவர் என்று-அதனாலென்ன-வாழ்க!
சுடுகாடுமண்டை,பல்லுக்கெண்டை,மண்டைவெல்லம் ,கட்டை வண்டி ,பஜ்ஜி,மூக்குப்பொடி, கொன்ன வாயன் -போன்ற பட்டப் பெயர்களுக்கும் எனக்கும் ஒரு தொடர்புமில்லை-ஆசையாய் எம் ஆசான்களுக்கு அன்பு மாணாக்கர் கொடுத்த பட்டங்கள்தாம் இவை.பின்னாளில் கல்லூரியில் பணியாற்றுகையில் எனக்கும் எதாவது பட்ட பெயர் வைத்திருப்பர் என்றே எண்ணுவேன் -அதெல்லாம் மாணவர்கள் அன்பைக் காண்பிக்கும் விதம். (to be continued!)

Comments

Popular posts from this blog