குண்டக்க  மண்டக்க ...


மதுரைக்காரர்களோடு பல ஆண்டுகள் பழகி வந்ததால் நம்மவர்கள் பேசும் விதம் பற்றியும் வேறு என்னைக் குலுக்கிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து  கொள்ள விழைகிறேன்.

பாம்பென்றும் சொல்லமுடியாது..பழுதென்றும் எடுத்துக்கொள்ளமுடியாது சிலரின் சொற்ப்ரயோகங்களை வைத்து..கலெக்டர்  அலுவலகத்திலிருந்து-ராஜாஜி மருத்துவமனை வந்துவிட்டு, ஷெனாய்நகர் ,மதிச்சியம் வழியாகத் திரும்பிப் போகும்-ஒரு பெரிய பாத்திரத்தில் சுண்டல் விற்றுப் பிழைப்பை நடத்தும் ஒரு டிபிக்கல் மதுரை ஆசாமி எங்கள் நண்பர் குழாத்துக்குப் பரிச்சயமானார்-அடிக்கடி எங்களுக்கு சுண்டல் விற்கப்போய் . அவர் பூணூல் அணிந்திருப்பார் -அந்தக் கால வழக்கப்படி-விற்பதற்கு அந்த அடையாளமெல்லாம் தேவைப்பட்டதே!அவரை அடிக்கடி சீண்டிப் பார்ப்பதில் எனது நண்பர் ஒருவர்க்கு வழக்கம்-கும்பலாகப் பழகினால் இந்தமாதிரியெல்லாம் ரகளை பண்ணுவது இன்றும் உண்டே..ஒருநாள் அவரிடம் எனதுநண்பர்-'ஆமாம் ஓய் -கயிறு  போட்டிருக்கிறீரே -இதன் அர்த்தமெல்லாம் தெரியுமா?' என்று சீண்ட அன்று இருந்த கடுப்பில் அந்த சுண்டல் விற்கிறவர்-"  "ஒய்-உமக்கு உங்க அப்பா தான் அப்பான்னு தெரியுமா?-அம்மா சொல்லித்தானே தெரியும்" என்று ஒருபோடு போட்டுவிட்டு "இதற்கு மேலும் நான் ஏதும் பேசக்கூடாது" என்று ஓடி விட்டார்-நாங்களெல்லாம் சிரித்தாலும் கூட அவரது சமயோசித பதிலைக் கண்டு நண்பரய்க்  கண்டித்து வைத்தோம்--'நம்ம ஜோலியைப் பாரடா' என்றே.

இன்னொரு நண்பர் சாமர்த்யமாகவே பேசுவதில் வல்லவர்-நன்கு படித்தவர் -விஷயம் தெரிந்தவர்-ஒருநாள் மாலையில் --அநேகமாகக் கோடையில் ஷெனாய்நகர் முதல் வீதி மரங்களினடியில் -பேச ஆரம்பித்தால் நடுநிசிகூட எங்கள் பேச்சு அந்தப் பகுதியை கிடு கிடுக்க வைக்கும்.எல்லோரும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மதிப்புக்குரிய அரசு ஊழியர்கள் பையன்கள்  என்பதால் பெரிதாகப் பிரச்சினைகள் வராது.அன்று சினிமா பற்றி பேசிக்கொண்டிருந்தபோது-ஒருவர் "டேய்-சார்லி சாப்ளினுக்கு பதினான்கு குழந்தைகள்  தெரியுமாடா?" என்று சொல்ல " --அதற்கு வாய்துடுக்குக்குப்பெயர்போன நண்பன்-" ஆமா-அதிலே எத்தனை அவனுக்குப் பிறந்ததோ -உனக்குத் தெரியுமா?" என்று பதில் சொல்ல, கேள்வி கேட்டவன் நொந்துபோனான்-நாங்களெல்லாம் அந்த மென்மையானவரைச் சமாதானப்  படுத்தினோம்.

ஆபாசமாகப் பேசுவதும் கீழ்த்தரமாக நடந்துகொள்வதும் எல்லாக் காலத்திலும் எல்லா ஊரிலும் நடந்துவரும் ஒரு சங்கதி தான்.மதுரைக் காரர்கள் விதிவிலக்கு அல்லவே .சரமாரியாகக்  கெ ட்ட வார்த்தைகள் சிறிய சண்டை வந்துவிட்டால் கூட இரைந்து  பேசும் பெரியவர்களும் .விடலைகளையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

சென்ட்ரல் டு தெப்பக்குளம் போகும் பேருந்தில் ஒருநாள் நகரையே உலுக்கிய சம்பவம் நடந்தது.யாரோ ஒரு பைத்தியக்கார வாலிபன் எதிரே அமர்ந்துவந்த ஒரு பெண்ணி ன் மார்பகத்தைக் கடிக்க முற்பட்டு சரியான உதை  வாங்கினானாம் .பலநாட்களுக்கு இது பீதியை கிளப்பிவிட்டது.

ஒரு பள்ளிக்கட்டிடமே பொன்னகரம் என்ற இடத்தில ஒரு சனிக்கிழமை இடிந்துவிழுந்ததில் பல சிறுவர் சிறுமியர் இறந்ததும் ஊரையே கலக்கிவிட்டது.

அதேபோல் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை அவரது வீட்டுக்குமுன் தீவிரவாதிகள் வெட்டிக் கொன்றதும்  பெரிய அச்சத்தை உண்டு செய்தது.

சிறந்தமுறையில் மக்களுக்குச் சேவை புரிந்துவந்த மார்க்சிஸ்ட் பெண் மாநகராட்சி உறுப்பினரை வீதியில் கொலை செய்த சம்பவமும் மதுரைக்குக் களங்கம் விளைவித்தது.

நான் சொல்வதெல்லாம் அறுபது-எழுபது எண்பதுகளில் நடந்தேறியவை.அதற்குப்பிறகு எல்லா ஊரூம்போல் நம்ம மதுரை ஆனதுதான் எல்லோருக்கும் தெரியுமே.

"லந்தடிப்பது" என்று மதுரையில் இப்போதும் தொடர்ந்து வருகிறது."அளப்பறை" யும் ,நக்கல் -நையாண்டி வகையைச் சேர்ந்ததே.

ஏசி ஹை ஸ்கூலில் ஒன்பதாவதுபடிக்கையில் " நாகேஷ்" வாத்யார்-இரண்டு பேரை முதல்நாளே எழச்சொல்லி 'பளார் பளார் 'என்று கன்னத்தில்  அறைந்தார்-அவர்கள் ரௌடிகள் என்று கேள்விப் பட்டாராம் !-வருடக் கடைசியில் அந்த நெடிய ஆசிரியருக்குத் தல்லாகுளம் மாணவர்கள் " 'மண்டகப்படி' நடத்தினர்... மதுரை ஓ மதுரை 35.

Comments

Popular posts from this blog