நான்மாடக் கூடல் நகரின் மையத்தில் மீனாட்சி கோயில் மட்டுமல்ல --அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் கூடலழகர் கோயிலும் இருப்பது சிறப்பல்லவா?பெரிய கோயில் என்றும் சொல்லமுடியாது-சிறிய கோயில் என்றும் கூறமுடியாது-பெருமாள் இங்கு உறையும்  அழகுமிகு கூடலழகர் ஆலயத்தை.  எதிரே மண்டபமும் ஸ்ரீ ஹயக்ரீவருக்கான சிறிய ஆலயமும்.எந்நேரமும் விஷ்ணு பக்தர்கள் ஏராளமான வடநாட்டு யாத்திரிகர்கள் வந்த வண்ணம் இருக்கும் சிறப்புமிகு ஆலயம்.  வாயிலில் யானையைச் சேவித்துவிட்டு உள்ளே நுழைந்தவுடன்-துவிஜஸ்தம்பம்-தரையில் விழுந்து சேவித்துவிட்டு-அருகே இருக்கும் தும்பிக்கை ஆழ்வார் தரிசனம்.

பெருமாள்கோயிலாதலால் முதலில் தாயாரைத் தரிசிக்க இடப்புறம் வாயிலைக் கடந்து ஸ்ரீ சக்கரத் தாழ்வார் சன்னதியில் மனமுருகப் பிரார்த்தனை-" சஹ்ராதித்ய  சங்காஸம் சஹஸ்ர வதனம் ப்ரபும்" -அப்படியே அவருடன் இணைந்த ஸ்ரீ யோக நரசிம்மரய்த் துதித்த வண்ணம் வலம் வருகிறோம்-எப்படிப்பட்ட எதிரிகளும் நமக்குத் தீமை செய்யாவண்ணம் இவர்கள் உபாசனை உதவுவதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்-எதிரிகள் எனில்-காரணமே இல்லாமல் நம்மை பயமுறுத்தும் எண்ணங்களைத் தான் குறிப்பிடுகிறேன்!

அடுத்து ஸ்ரீ மதுரவல்லித்  தாயார் என்ற திவ்வியநாமத்துடன் விளங்கும் மஹாலக்ஷ்மியை வணங்க பெரிய
ஹாலில் நுழைந்து படியேறி கருவறைக்குள் நுழைகிறோம்--அடடா என்ன அழகு ! என்ன அமைதி அந்த இடத்தில்! அழகிய ஆபரணங்கள் தரித்து , சிரித்த முகத்தினராய் -பெரும் பாசத்தோடு நம்மைப் பரவசப் படுத்தும் மஹாசக்தியைக் கண்ணாரக் கண்டு களிக்கிறோம்.ஸ்ரீமஹாலக்ஷ்மி காயத்ரி சொல்லிச் சொல்லி மகிழ்வெய்துகிறோம்.ஆர்த்தி சேவை சாதித்து அம்மன் சடாரியைத்தாங்கி-குங்குமம் கைநிறைய வாங்கி வெளி வருகிறோம். வலமாக வருகிறோம் செபித்தவாறே. சன்னதியில் அமர்ந்து தியானிக்கிறோம்- பொருள்வளம் கூடவும்-கடன் தொல்லை தீரவும்-வேறு எவர் நமக்கு கதி கடவுளரை விட்டால்?

மீண்டும் வந்தவழியே புறப்பட்டு ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அர்த்தமண்டபம் ஏறி பெரிய திருவடி எனப் போற்றப்படும் ஸ்ரீ கருடாழ்வாரைத் தரிசிக்கும் பாக்கியம்.அருகே இடப்பக்கம் ஸ்ரீ ஆஞ்சநேயர் -மூன்றடி உயரத்தில் -கூப்பிய கரங்களுடன்-நேர் எதிரில் கோதண்ட ராமரும்-விஸ்வக் சேனரும் ! எப்போதுமே அண்ணல் ராமபிரான் -அன்னை சீதா தேவி மற்றும் லக்ஷ்மணர், மாருதி  சகிதம் திருக்காட்சி அளிக்கும்கோலம் கண்ணீரை -ஆனந்தக் கண்ணீரை வர வழைக்கும்"ஆபதாத் அபகர்த்தாராம் .. என்ற ஸ்தோத்திரத்தை உச்சரித்து அவர்தம் பெருமையை எண்ணி உள்ளே செல்லாத தலைப்படுகிறோம்.

   ஐம்பது அடிகள் தாண்டி அமர்ந்த மேனியாய்  ஆஜானுபாஹுவாய் அண்ணல் கூடலழகர் பெருமான் காட்சி நெஞ்சை அள்ளுகிறது."பச்சைமால் மலைபோல் மேனி , பவளவாய்க்  கமலச்  செங்கண்" எனவே பாடத்துவங்குகிறது மனது.நெருங்க நெருங்க அண்ணலின் திருமேனி அழகு நம்மை பிரமிக்க வைக்கிறது.வெளியே அகன்று நெடிந்த கோபுரம்-உள்ளே அழகிய உயர்ந்த  திருமேனியராய் ஸ்ரீ விஷ்ணு.
பட்டர்கள் கூறும் ஸ்தலபுராணம் கேட்டுவிட்டு தீபாராதனையைக் கண்ணாரச் சேவித்துவிட்டு -எம்பெருமான் சடாரியைத் தோள்களிலும் சிரசிலும் தாங்கும் பேறு பெற்று உள்ளே  பிரகாராத்தைச் சுற்றிவருகிறோம் மீண்டும் அய்யனையும் ஸ்ரீதேவி பூதேவியாரையும் உற்றுநோக்கி வணங்கிவிட்டு--
நாம் பார்த்ததிலேயே மிகச் சிறிய பிரகாரம் இதுவாகவே இருக்கும் - பன்னிருமுறை திருவலம் வருகிறோம் ஓம் நமோ நாராயணாய என்று சொல்லிச் சொல்லி.

பின்னர் வெளிப்புறம் பெரிய பிரகாரத்தையும் சுற்றிவருகையில் கோபுர அழகைக் கண்டு வியக்கிறோம்-அதுவும் பௌர்ணமி நிலவுகளில் அந்த இடம் நம்மைப் புராண காலங்களுக்கே கொண்டுவிடும் !
இடப்புறம் வழியாகச் சென்று தனியே சந்நிதிகொண்டிருக்கும் ஆண்டாள் --சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் -கோதைப்பிராட்டியார் சேவை ..என்ன பொலிவும் யவ்வனமும் இனிமையும் குடிகொண்ட வதனத்தினள் ! திருவலமாக வந்து -கோயிலின் முற்புறம் நவகிரஹ தரிசனம் -நல்ல பெரிய  நவகோள் கற்சிலைகள்! தீபமும் ஏற்றிவைத்து நம் ஆலய வழி பாட்டை-கொடிக்கம்பம் அருகே அமர்ந்து நன்கு தியானம் செய்து -நிறைவு செய்கிறோம்.

Comments

Popular posts from this blog