"சொல்லச் சொல்ல இனிக்குதடா "-முருகன் பெயரை மட்டும் அல்ல, மதுரைத்தமிழையும் எண்ணி எண்ணி!மதுரைக்காரர்களுக்கே அந்த உண்மை தெரியாது. கோவைத் தமிழ் கொஞ்சிப் பார்ப்பதுபோல் இருக்கும்-"ஏனுங்க" என்றெல்லாம்-சிவாஜி -மக்களைப்  பெற்ற மகராசி'யில் பேசுவது போல்.நெல்லைத் தமிழ் 'என்னலே ' என்று கூவுவதுபோல் இனிமையாக இருக்கும்.எல்லாம் தமிழ்தான்-சிறப்புடையதுதான்-சென்னைத் தமிழ் -கேட்கவே வேண்டாம்-வடசென்னையில் இன்னும் உயிரோடு உலவிவருகிறது.பல இலக்கிய ஜாம்பவான்கள் சிறப்பாகவே சென்னைச் சேரித் தமிழைக் கையாண்டிருப்பார்கள்.இலக்கியக் கூட்டங்களில் நல்லமுறையில் என்றும் 'ஸ்டாண்டர்ட் தமிழ்'பேசப்பட்டு வருகிறது.தமிழ் ஒருபோதும் அழியாது.மேன் மேலும் வளரும்.

பள்ளிகள் இந்தத் தமிழைப் பரப்புவதில் பெரும் பங்கு வகித்தன.1965 ல் நடந்த இந்தி எதிர்ப்பும் பல ஆண்டுகளாகவே நடைபெற்றுவந்த தனித் தமிழ் இயக்கங்களும் இந்த வேள்வியில் முக்கியப் பங்கு வகித்தன.அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளி,மதுரைக்கல்லூரி உயர்நிலைப் பள்ளி, யுசி ஹை ஸ்கூல்-செயின்ட் மேரி'ஸ் உயர்நிலைப் பள்ளிகள் அப்போது மதுரையில் பிரபலமானவை.1970 க்குப் பின்னர் ஏராளமான கல்விச் சாலைகள் மதுரையில் தொடங்கப் பட்டு -கல்வித் பணியைச் சிறப்பாகவே செய்து வருகின்றன .

 பற்பலத் தமிழ் அமைப்புகள் மதுரைமாநகரிலும் தமிழை நல்லமுறையில் பரப்பிவருகின்றன.எனக்குத் தெரிந்து அந்தக் காலத்திலிருந்தே இந்த அரிய பணியில் மீனாட்சி கோயிலில் ஆடி வீதியில் இயங்கிவரும் திருவள்ளுவர் கழகம் உதவி வருகிறது.இதைத் தவிர பாரதியார் பெயரில் இயங்கிவரும் நல்ல அமைப்புகளும் கண்ணதாசன் பெயரில் இயங்கிவரும் சங்கங்களும் -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், ,மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியபெருமன்ற அமைப்புகளும் நன்றாகவே இந்தப் புனிதப் பணியில் சேவை செய்துவருகின்றன.காலேஜ் ஹவுஸ் மணிமாறன் ,டாக்டர்.சேதுராமன், திரு. சொக்கலிங்கம் ,போன்ற தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்பும் பாராட்டுதற்குரியது.

மதுரைத் தமிழ் சங்க ஆசிரியர்கள் பணியும் போற்றுதற்குரியது. திராவிட இயக்கங்கள் பற்றிய அரசியல்பார்வை எப்படி இருந்தாலும் அவர்கள் தமிழுக்குச் செய்த அரி ய பங்களிப்பை அன்புடன் நினைவு கூரு கிறேன்.
சிறிதுநேரம் பஸ் நிலையங்கள் மற்றும் முக்கியமான மதுரை வீதிகளில் நின்று கவனித்தாலே செந்தமிழின் எல்லா வகை ஒலி வகைகளையும் கேட்டு இன்புறமுடியும்.-'கெட்ட பாஷை' உட்பட-சென்னையை அதில் மதுரைக் காரர்கள் மிஞ்சிவிட முடியாது.

ஒவ்வொரு கல்லூரி -பள்ளிகளிலும் தமிழுக்கு உழைக்கும் உத்தமமானத் தமிழாசிரியர்கள் இன்றும் என்றும் இருந்து வளர்க்கிறார்கள்.சாலமன் பாப்பையா ,ராஜாராம் .லியோனி மற்றும் ஏராளமான பட்டிமன்றப் பேச்சாளர்கள் ஆற்றிவரும் பணியும் குறிப்பிடத்தகுந்தது .வைரமுத்து,வேல. ராமமூர்த்தி, சு.வெங்கடேசன் போன்ற பிரபலங்களின் பங்கும் மதுரை மாவட்டத்தை முன்னுக்கு வைக்கும்.வடிவேலு தமிழ் என்ன குறைவுடையதா?விவேக்கின் தமிழும் என்ன ஏற்புடையது அல்லவா?

'ஆங்கிலம் பேச்சு-தமிழ்தான் மூச்சு 'என்றே ஆங்கில ஆசிரியர் பலரும்கூட தமிழில் ஆங்கிலப்  பாடம் விளக்குவது தவறு என்று சொல்லும் அறிவுஜீவிகள் இருக்கலாம் ,ஆனால் அதில் பெரும் தவறு இருப்பதாக எனக்குத்தெரிவதில்லை.தமிழில் இருக்கும் அற்புதமானப் படைப்புகள் படிக்காமல் ஆங்கிலப் புலமை  பேரறிவு என்று    நினைப்பதில்  நம்பிக்கையில்லை.

1980ல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் நடந்த நிகழ்வுகளிலும் ஊர்வலங்களிலும் கலந்துகொண்டு 'தெருவெங்கும் தமிழ் முழக்கம்' செய்ததை மறக்கமுடியுமா? மதுரை மதுரை தான்..

மதுரை ஓ மதுரை-31.

Comments

Popular posts from this blog