மாரியம்மன் தெப்பக்குளம் ..

மதுரையில் ராஜாஜி பார்க்கைத் தவிர காற்று வாங்கும் இடமாகப்  பெரிய கோயில் பிரகாரங்கள் உண்டு -மீனாட்சி கோயில் ஆடிவீதி , கூடலழகர் பிரகாரம் மற்றும் பரந்துபட்ட மாரியம்மன் தெப்பக்குளம் போன்றவை.எங்கள் காலத்தில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் நீர் நிறைந்த கண்கொள்ளாக் காட்சி தரும் எழில் ஓவியம் போல் இருந்தது-அறுபதுகளில்.படக்குச்  சவாரியும் உண்டு மைய மண்டபம்  சென்றுவர!மையமண்டபத்தில் மலர்கள் நிறைந்த சோலையும் இருந்தது-வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டு.சாப்பிடத்  தின்பண்டங்கள் கிடைக்கும்,குளிர் தரும் நெடிய மரங்கள் உண்டு.வயிறார அருந்த நல்ல குடிநீரும் கிடைக்கும்.நாங்கள் ஆடி ஓடி விளையாடி இன்புற்று மகிழ்ந்திருந்தோம்.பின்னர் காலாற நடந்து நல்ல காற்று வாங்கும் இடமாகவே மாறிப்  போனது. அதனாலென்ன-ஆண்டுக்கு ஓர் முறை தைப்பூசத்திரு நாளில் தெப்ப உதசவத்தில் அன்னையும் தந்தையும் மலர்களும் ஒளிமிகுவிளக்குகளும் அலங்கரிக்கப்பட்ட படகில் பவனி வரும் அற்புத விழா இன்னும் முன்னைக்கு காட்டிலும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது.பல்லாயிரக் கணக்கில் மக்கள்கூடி அருளைப்பெறுவர்.மற்ற சமயங்களில் நடை பயில்வோருக்கும் ,கிரிக்கெட்,கபடி   விளையாடும் சிறார்களுக்கும் ஏதுவான மைதானம் ஆகிவிட்டது காலத்தின் கட்டாயம்.

எங்கள் கல்லூரி (தியாகராஜர் கல்லூரி)நாட்களிலிருந்தே  இந்த நிலை தான்.வகுப்பறையிலிருந்துத் தப்பி சென்று நான்,மோகன்,பிரான்சிஸ் பால்,எத்திராஜ் ஆகியோர் மாரியம்மன் கோவிலுக்கு அருகே சுவரைத் தாண்டிக் குதித்துவிட்டு மைய மண்டபம் நோக்கி நடந்துவிடுவோம்-சினிமா பார்க்க விரும்பாவிட்டால்.பல காதலிக்கக் கற்றுக்  கொண்டிருக்கும் ஜோடிகளைப் பார்த்து பொறாமைப் பட்டிருக்கிறோம்.சில கும்பல் சீட்டாடுவர்.சிலர் கடலை மற்றும் முறுக்கு விற்பர்.சிலர் வெறுமே ஆகாயத்தை வெறித்துப் பார்த்து அமர்ந்திருப்பர்.கிளி ஜோசியம் அங்கேயும் ஜோராக நடைபெறும்.வண்டியூர்ப் பெருசுகள் முறைத்தவாறே எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பர்.அதுவும் ஓர் தனி உலகம்.ரொம்பப் பேர் அப்போதெல்லாம் வேலை வெட்டி இன்றி வெறுமே பொழுதைக் கழிப்பர்-வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் முடியும் காட்சிகளும் அங்கே  அரங்கேறும்.ஆயினும் அந்த இடம் அருமையான இடம்-கனவு காணவும்,கவிதை பாடவும்,கதைக்கவும், கண்டதை சுதந்திரமாகப் பேசுவதற்கும்.  அங்கிருந்து கல்லூரியைப் பார்த்துக்கொண்டு,கால்களை ஆட்டிக்கொண்டு மையமண்டபத்தின் மூலையில் இருக்கும் சிறிய மண்டபதிலமர்ந்து விண்ணையும் பறக்கும் அழகிய பறவைக்கூட்டங்களையும் வேடிக்கை பார்த்து வருவோம்.குளத்தின் மேற்குப் பகுதியில் சிவன் கோயில் ஒன்று உண்டு-மிகுந்த வர பிரசாதி அவர்.தெப்பக்குளம் கட்ட மண்ணை மன்னர் திருமலை எடுத்தபோது அங்கெ கிடைத்தவர் தான் மீனாட்சி கோவிலில் ஏழடிக்கு ஆஜானுபாகுவாய்க் காட்சி அளிக்கும் ஏற்றமும் அருளும் என்றும் நவிலும் முக்குறுணி விநாயகர்!

இயற்கையின்  எழிலையும் மாரியம்மன் அருளையும் முழுதும் பெற்றிட அவசியம் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு சென்றுவாருங்கள்.திருவாரூர் கமலாலயத்தை விடவும் இது மிகப் பெரியது. தெப்பக்குளம் தாண்டி அப்போதெல்லாம் வயல்வெளிகளும், தோப்புகளும் தான்.சில கரும்புத்தோட்டங்கள் குடிசைத்தொழில்களாக வெல்லம் தயாரித்தன.நாங்கள் அங்கேயும் சென்று கொஞ்சம் காசுக்கு நிறைய அச்சு வெல்லங்கள் வாங்கிக் கடலையுடன் சாப்பிட்ட நாட்களும் உண்டு.
  மதுரை    ஓ  மதுரை 22.

Comments

Popular posts from this blog