Srikrishnan Ku's photo.
Srikrishnan Ku's photo.
தமிழில் ஜான் கீட்ஸின் அழகு கவிதை!
Based on John Keats' Ode to a nightingale--
என் இதயம் வலிக்கிறது-என் உணர்வுகள்
மரத்துவிட்டன -ஏதோ விஷம் குடித்தாற்போல்
அல்லது அபினை அருந்தியது போலவும் -
இல்லை லித்தி நதியில் மூழ்கியதுபோலவா?
இப்படி இருப்பது உன் மகிழ்ச்சியில் பொறாமை கொண்டா-...
குயிலே-உனது களிப்பில் நானும் மகிழ்ந்திருந்ததாலா?
மென்மையான சிறகுகள் கொண்ட தேவதையே !
ஓ பச்சைப்பசேல் பீச்சென் மரங்களில் அமர்ந்து
இக்கோடையில் முழு வீச்சில் நீ பாடுவதைக் கேட்பதாலா?

நெடுநாள் பூமிக்கடியில் குளிர்விக்கப்பட்ட
மதுரசம் ஓர் கிண்ணத்தில் ஏத்திப் பருக ஆசை
அதுதான் பூக்களின் -நாட்டுப்புறச் செடிகளின்
வாசத்தோடு சுவைக்கும்-ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம்!
கதகதப்பான தென் பிரெஞ்சு மது ஓர் பாட்டில் நிறைய -
ஆஹா-ஹிப்போக்ரின் நிறத்தில் -கிறங்குகிறேன்!-
முத்துமுத்தாய் உருண்டு திரண்டு நிரம்பி வழியும் !
இதழ்களெல்லாம் சிவப்பு நிறமாகி -நான் குடிப்பேன்
இவ்வுலகிடமிருந்து வெகு தொலைவு செல்வேன்-
உன்னோடு மறைந்துவிடுவேன்-காட்டுக்குள்ளே!

மறைவேன் வெகுதொலைவில்-கரைவேன்-மறப்பேன்
நீ இலைகளுக்கு நடுவே என்றும் அறியாததெல்லாம்-
தளர்வும், காய்ச்சலும்-உறுத்தலும் இப்புவியில்
மானிடர்களிடையே-அருகருகே அமர்ந்து புலம்பலும்!
பாரிசம் தாக்கி சிலர் துயருற்று , தலையெல்லாம் நரைத்து-
ஏன் இளைஞர்கள் கூட ஒளி இழந்து சோகைபிடித்து மரிக்க-
இங்கே பூமிதனில் சிந்திப்பதெல்லாம் சோகமயமாக-
கண்ணிமைகள் கனத்து அழகெல்லாம்இழந்தும்-
அன்பெல்லாம் வறண்டும் -வாழ்வே இப்படித்தான்!

பறந்து செல்,பறந்து செல்-உன்னிடம் நான் வருகிறேன் -
மதுவின் போதையில்-மதுக்கடவுள் பாக்கஸுடன் அல்ல-
ஆனால் எனது கவிதைச் சிறகுகளை விரித்துவைத்து-
என் சித்தம் குழம்புகிறது-வேகமும் சற்றே குறைகிறது,
அட-ஏற்கனவே நான் உன்னோடு!இவ்விரவு மிக மென்மையே!
நிலா அரசி தனது தோழியருடன் சூழ்ந்து அரியணையில்-
ஆயினும் இந்தக்கரிய இருளும்கூட வானவீதியில் வரும்
சிற்றொளி மரங்களூடே பாய்ந்துவர பசுமையும்மங்கிட
சிறிதே இடைவெளியில் வரும் காற்றும் இங்கே உலா வரும்

இவ்விருளில் உன் இடத்தில் இங்கு பல வகை மலர்கள் என் காலடியில்
அத்துடன் நறுமணம் மிக்க கிளைகள்-என்னால் அவைகளைக் காணமுடியாது
ஆயினும் வாசம் மிகு இவ்விரவில் இனியவை அனைத்தையும் உணர்வேன்-
இப்பருவத்தில் செழிக்கும் புற்கள் புதர்கள் பழங்கள் சுமக்கும் மரங்கள்
வெண்ணிற ஹாதார்ன்,மண்ணுக்கே உரிய எக்லன்டின் பூக்கள் --
விரைந்து வெளுக்கும்-மே மாத வயலட் அங்கே-இலைகளால் மூடப்பட்டு-
இவைகளோடு மதுத்தேன்வழியும் மஸ்க்ரோஜாக்களும் -என்னே மணம்!
கோடைமாலையில் பண்ணிசை ரீங்காரமிடும் தேனீக்களின் ராகங்களும்-

கரிய இருளையே கவனிக்கிறேன்-ஏனெனில் பலப்பல நேரங்களில்
இனிமைமிகு இறப்புடன் பாதி மையலில் விழுந்திருக்கிறேன்!
எத்தனைமுறை மென்மையான பெயர்களில் சாவை அழைத்திருக்கிறேன்-
என்னுயிரைக் காற்றுடன் அமைதியாகக் கலந்துவிடு என்றே-
எப்போதையும்விட இக்கணமே உயிரைவிடச் சரியான தருணம்!
இந்நள்ளிரவில் உடலைக்கிடத்தி வலியற்று உயிர்பிரிதல்-அடடா-
அதுவும் நீ உன் ஆன்மாவையே உச்சத்தில் இசையோடு பாடுகையில்-
மேன்மேலும் பாடுக குயிலே-இதைக் கேட்காத செவிகள் இருந்தென்ன?
நீ பாடப்பாட-உன் இரங்கற்பாக்களுக்கு நான் புதை மண்ணாய் இருப்பேன்!

இருப்பதற்காக நீ பிறக்கவில்லை என்றுமுளப் பறவையே !
புசிக்கவரும் பசிமிக்க தலைமுறைகள் உன்னை வெல்ல இயலாது-
இன்றிரவு நான் கேட்ட ஓசையெல்லாம் அந்நாளில்
பேரரசர்களும் விகடகவிகளும் கேட்டு மகிழ்ந்திருப்பர்-
அதற்குப்பின் வந்த எண்ணற்றோர் உன்னைக்கேட்டிருப்பர்-
விவிலிய ரூத் கண்ணீர் மல்க வீடு திரும்புகையில் உன் பாக்களை
தனிமையில் சோகமுடன் சோளக்காட்டில் கேட்டு ஆறுலதலடைவாள்!
பலமுறை அவை ஒலித்துஒலித்து -அபாயமிகு ஆழ்கடல்களில்
தேவதைகள் வாழும் இடங்களில்-மந்திர பேழைகளையும்
திறந்திருப்பாய்-இக்காட்டிலிருந்து சென்று தனிமையில் கூவியிருப்பாய்!

தனித்துவிடப்படுவது-ஓ அது அபாய ஒலி எழுப்பும் மணிபோன்றது-
என்னை என்னுடைய முழுமையான ஆன்மாவில் இணைப்பதுபோல்!
சென்று வாறேன் குயிலே!என் கற்பனையால் உனை ஏமாற்றுவதா என்ன?
அது நடக்கலாம் ஜீனிகளிடம்-உன்னிடமன்று-வருகிறேன் வருகிறேன்-
அதோ உன் சோக கீதமும் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது-
இதோ இங்கே புல்வெளியில்-அங்கெ அமைதியான ஓடை அருகே-
இப்போது அம்மலையினருகே-அந்த பள்ளத்தாக்கில் ஆழ்ந்து மறைகிறது-
இதெல்லாம் தோற்றமா அன்று விழிப்புநிலைக் கனவா?
குயிலின் இசை போயிற்று-போயிற்று-விழிப்பா? உறக்கமா?

Ode to a Nightingale"

Comments

Popular posts from this blog