முடிகின்ற நாளை அறிவித்து மணி ஒலி எழுப்பியது
மேய்ச்சலை முடித்தே கத்தும் ஆவினம் திரும்பின
ஏர் உழவர் தம் இல்லம் நோக்கி களைப்புடன் வந்தனர்
இருட்டும் உலகமும் என்...னிடம் இப்போது மிஞ்சியது
பார்வையிலிருந்து ஒளிர்ந்த காட்சி மெல்ல மறைகிறது
எங்கெங்கும் காற்றில் நிரம்பிநின்றது அருள் பேரமைதி
தட்டாம்பூச்சியின் கூச்சல்களும் பறத்தலுமே எஞ்சியது
மயக்க நிலையே தாலாட்டுது தொலைதூரக் காட்சிகளை
ஐவிகொடிபடர்ந்த அந்த ஆலயக்கோபுரஉச்சியில் மட்டும்
முணுமுணுத்த ஆந்தை ஒன்று நிலவுக்குப் புகார் செய்தது
ஏதோ அதன் ரஹஸ்ய அறையினுள் அத்துமீறியதாம்
அதன் அக்காலம்தொட்டுவரும் வீட்டில் கேடு வந்துற்றதாம்
அந்தக் கரடுமுரடான எல்ம்ஸ் மரங்கள் கீழ் , யூமர நிழலில்
புற்கள் படர்ந்த மண் மேடு மேடாய்க் குவிந்து இருந்தன
ஒவ்வொருவரும் தத்தம் இடத்தில் வெகுகாலமாக இருந்தனர்
எம் முன்னோர்கள்தாம்-ஊர்நாட்டார் -எம் குடிலிலிருந்து சென்றார்
நறுமணம்பரப்பும் இனிய காலைத் தென்றல் காற்று
வைக்கோல் கூடுகளிலிருந்து ஒலியெழுப்பும் ஸ்வால்லோ
சேவல்களின் கொக்கரக்கோ மற்றும் மேய்ப்பனின் குழலொலி
இவையாவும் இவர்களின் படுக்கையிலிருந்து எழுப்பாது இனி
தகிக்கும் கணப்புகள் அவர்களை சுட்டெரிக்காது
எந்த சுறுசுறுப்பான இல்லாளும் அன்பைக் சொரியார்
எந்தக் குழந்தையும் ஓடிஓடித்தந்தையின் வரவு கூறார்
அவர்தம் முழங்காலில் ஏறி விரும்பும் முத்தம் தாரார்
என்றென்றும் வயல்களில் அறுவடை இவர்களே செய்வர்
ஏரின் உதவியில் நிலத்தில் விதைகள் இனிதே விதைப்பர்
குதூகலமாய்க் கொண்டாடி நிலத்தில் கூடி உழைப்பர்
உறுதியான வெட்டுதலில் காடுகள் விளைநிலமாயிற்று
பேராண்மை அன்று அவர்கள் உழைப்பை உதாசீனிப்பதும்
அவர் இல்ல மகிழ்வுகள், மறைபடும் விதிகளை மிதிப்பதும்
பேராற்றல் ஒருபோதும் அவர்கள் சிரிப்பை வெறுக்க எண்ணாது
எளியவர்களின் சீரியபணிகளை என்றுமே எள்ளல் ஆகாது
பெருமை ஏன் அரச சால்வையினால் டம்பம் ஏன் பலத்தால்
வழங்கிய அழகு அனைத்தும் சேர்த்த செல்வம் எல்லாம்
காத்திருக்கும் தவிர்க்கமுடியா அந்த ஓர் மணித்துளிக்கு
புகழின் வழிகள் யாவும் நம்மை இடுகாட்டுக்கே இட்டுச்செல்லும்
பெருமை பீற்றுவோரே எதற்கும் கற்பிக்காதீர் நோக்கம் ஏதும்
இவ்வேழைகளின் கல்லறை பளிங்கில் இல்லாதது குறித்து
தேவாலய நீள்வரிசைகளும் அலங்கார வளைவுகள் எங்கும்
எதிரொலிக்கும் சங்கீதமே முழங்கும் இவர்கள் உயர்வுதனை
அறிவு தனது பக்கங்களைக் கரையான்போல் அரித்து
உழைப்போரின் கண்களில் காணாமல் மறைத்தது
கடும் இல்லாமை அவர்கள் சீரிய சினத்தை அடக்கியது
அதுவே அவர் அன்பு ஆத்ம ராகங்களை உறைய வைத்தது
பற்பல ஸ்படிகக் கற்கள் ஒளி சிந்திச் சுடர்விடும்
இருண்ட அளக்கவொண்ணா ஆழ்கடல் தாங்கிடும்
பற்பல மணம் மிகு மலர்கள் பிறந்து சிரிக்கும் யாரறிவார்
அவை தம் இனிமையையெல்லாம் பாலையில் வீணடிக்கும்.

based on Shakespeare's The Tempest ..
அங்கம்-1-காட்சி- 2
மிராண்டா: அன்புத் தந்தையே ,உங்கள் மந்திரக்கலையால் இக்கடலைக் கதறவிட்டிருந்தால் -அதை நிறுத்துங்கள்! வானம் கரிய தாரைக்கடலில் கலக்கிறது-பொங்கிவரும் நெருப்புச் சீற்றத்தால் கடல் வானத்தையே தொட்டுவிடும்போல் உள்ளது.அங்கே துயருறும் உயிர்களைக்கண்டு நான் வருந்துகிறேன்-அழகான கப்பல் -அதனுள்ளே இருந்த அனைத்து மனிதர்களுடன் -கடலில் மூழ்கி தூள் தூளாகிவிட்டதே!அவர்களது கூக்குரல் என் இதயத்தைப் பிளக்கிறது-பாவம் அவர்கள் மறைந்துவிட்டார்கள்!நான் மட்டும் சக்தி உடைய கடவுளாக இருந்தால் ,இக்கடலையே வற்றவைத்திருப்பேன்,கப்பலுக்கு மனிதர்களுக்கும் எவ்வித சேதாரமும் ஏற்பட்டிருக்காது.
ப்ராஸ்பெரோ: அமைதியாய் இரு! இரக்கமுள்ள இதயத்திடம் எவ்விதத் தீங்கும் கப்பலுக்கு வரவில்லை என்று சொல்.
மிராண்டா: மிக மோசமான நாள் இது!
ப்ராஸ்பெரோ:ஒரு தீங்கும் நேரவில்லை என்றே நான் உன்னிடம் சொல்கிறேன்...அன்பான என் பெண்ணே!உனக்காகத்தான் இவற்றையெல்லாம் நான் செய்தேன்.நீ யார் -நான் யார் என்பெதெல்லாம் உனக்குத் தெரியாது.-எங்கிருந்து வருகிறேன் நான்? வெறும் ப்ரொஸ்பேரோ மட்டுமா நான்?இந்தச் சிறிய வீட்டில் உனது சிறந்த தந்தையாய் மட்டுமே பார்த்துவருகிறாய் என்பதெல்லாம் உண்மை இல்லை!
மிராண்டா: அதிகம் தெரிய ஆசைதான்-அந்த எண்ணத்திற்கு மேல் சிந்திக்க முற்படவில்லையே?
ப்ராஸ்பெரோ:இன்னும் விளக்கமாக இவை எல்லாம் பற்றிக்கூறும் நேரம் வந்துவிட்டது.இந்த மந்திர ஆடையை என்மீதிருந்து எடுத்துவிடு
மிராண்டா மந்திர ஆடையை அகற்றுகிறாள்.
ப்ராஸ்பெரோ:ஓ மந்திரக் கலையே--சற்றே அங்கு இரு-.மிராண்டா ,உன் கண்களைத் துடைத்துக்கொள்!சாந்தமாய் இரு.உன் இரக்க உணர்வின் அஸ்திவாரத்தையே தொட்டுவிட்ட கப்பல் சீரழிவு என் மந்திரக்கலையின் அம்சமே!திட்டமிட்டது தான்- அவர்களுக்கு எவ்விதத் தீங்கும் வராமல்-ஒருமுடிகூட உதிராமல் -பாதுகாப்புடன் நடத்தப்பட்டதால் -கப்பல் மூழ்கியது.உட்கார் -இனி உனக்கு நிறையத் தெரிய வேண்டி உள்ளது
இருவரும் அமர்கின்றனர்..
மிராண்டா:முன்பேகூட நம்மைப்பற்றிச் சொல்ல நீங்கள் துவங்கியுடன்-நான் சரமாரியாய்க் கேள்விகள் கேட்க-நீங்கள் "இப்போது வேண்டாம்" என்று நிறுத்தினீர்களே!
ப்ராஸ்பெரோ: இப்போது அந்த நேரம் வந்துவிட்டது.நன்றாகக் கவனமுடன் கேள்,இந்தக்குகைக்கு வருமுன் நீ என்ன நினைவில் வைத்திருக்கிறாய்? -சொல்லமுடியாது உன்னால் என்றே எண்ணுகிறேன்-அப்போதே உனக்கு மூன்று வயதுக்குள்தான்!
மிராண்டா: என்னால் கொஞ்சம் நினைவு கூரமுடியும் அப்பா!
ப்ராஸ்பெரோ: என்னென்று-ஏதேனும் வீட்டை வைத்து-மனிதர்களைக் குறித்து-அல்லது வேறென்ன வடிவம் உன் நினைவுக்கு வருகிறதோ-சொல் பார்ப்போம்.
மிராண்டா:வெகு காலத்திற்குமுன்-கனவுபோல் தோன்றுகிறது-நாலைந்து பணிப்பெண்கள் என்னைப்பார்த்துக்கொள்ளவில்லை?
ப்ராஸ்பெரோ:ஆம்-அதற்குமேலும்தான்!எப்படி உன் நினைவில் இது நிற்கிறது?வேறு என்னென்ன அந்த நினைவுகளின் இருண்டகாலத்தில் நடந்தன?அவை வந்தால்-நீ எப்படி இங்கே வந்தாய் என்பதையும் கூறமுடியும்.
மிராண்டா:ஓ , அது என் நினைவுக்கு வரவில்லையே!
ப்ராஸ்பெரோ:பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன்-மகளே-பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்-உன் தந்தை மிலன் நாட்டுச் சீமான்-இளைய அரசனும்-சக்திவாய்ந்தவன்.
மிராண்டா: அய்யா -நீங்கள் என் தந்தை இல்லையா என்ன?
ப்ராஸ்பெரோ: உன் தாய்-நல்ல குணவதி-நீயே அவளது மகள்-உன் தாய் தந்தையரின் ஒரே வாரிசு நீ.
மிராண்டா:ஓ! இந்தக் கொடுமையான சதி அல்லது ஏதோ ஆசிர்வாதத்தில் இங்கு வந்து சேர்ந்தோம்-அப்பா?
ப்ராஸ்பெரோ: இரண்டும்தான்-இரண்டும்தான் மகளே!நம்மை ஆட்சியிலிருந்து சதிகாரக்கும்பல் துரத்தியது-இப்படி ஓர் தீவுக்கு வந்து இருக்க நேர்ந்ததும்-நன்மைக்கு என எண்ணுகிறேன்.
மிராண்டா:என் இதயம் பிளக்கிறதுபோலுள்ளது-தங்களை இவைகளை நினைவுகூரவைப்பது--மேலும் சொல்லுங்கள்!


                     -----based on Shakespeare's Tempest.

Comments

Popular posts from this blog